ஞாயிறு, 13 மார்ச், 2016

பேராசிரியர் அருணன் அபத்தங்களின் அவதாரம் பாகம் 1

பேராசிரியர் அருணன் அபத்தங்களின் அவதாரம் பாகம் 1

தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது .வாக்காளப் பெருமக்களைக் குழப்பி முட்டாளாக்க முனையும் வேலையில் சி.பி.எம் கட்சியினைச் சேர்ந்த பேராசிரியர் அருணன் போன்றவர்களின் தொலைக்காட்சி விவாதக் கோமாளித்தனங்களையும் ,எதிராளியைப் பேச விடாது கத்திக் குதறும் பண்பாடற்ற செயல்களையும் கண்டு சின்ன வயது பூச்சாண்டி பிம்பங்கள் வந்து பயமுறுத்துகின்றன .இதையெல்லாம் கூடத் தாங்கிக் கொள்ளலாம் போலத் தெரிகிறது .மெத்தப் படித்த பேராசிரியர் அருணன் அவிழ்த்து விடும் பொய்களைக் கேட்டு ,சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம் என்று மனம் குமுறுகிறது .

சில நாட்களுக்கு முன்பு 7 நியூஸ் தொலைக் காட்சி விவாதத்தில் 'நாம் தமிழர் கட்சி ' யைச் சேர்ந்த திரு .அறிவுச் செல்வன் என்பவரைப் பேச விடாமல் கூச்சல் போட்டுக் கொண்டிருந்த பேராசிரியர் அருணன் "நீங்கள் பிராமணியக் கடவுளைத் தூக்கிப் பிடிக்கிறீர்கள் ,முருகப் பெருமானுக்காகப் போராடுகிறீர்கள் ,நீங்கள் இந்து முன்னணியின் மறு பதிப்பு என்று பித்துப் பிடித்தவர் போலக் கத்திக் கொண்டிருந்தார் .தமிழர்களின் மரபு ,கலாச்சாரம் ,பண்பாடு ,நெடிய வரலாறு இவை பற்றியும் அதில் குறிஞ்சி மலைக் கடவுளாகிய முருகப் பெருமானின் இடம் பற்றியும் அறிவுத் தெளிவோ புரிதலோ இல்லாமல் பேசிக் கொண்டிருத்த பேராசிரியர் அருணன் இனி விவாதங்களுக்கு  வருவதற்கு முன்னால் இது குறித்துப் படித்து தெரிந்து கொண்டு வருவது நல்லது .

தமிழர்களின் மொழி,அதன் இலக்கியச் சிறப்பு ,வழிபாட்டு முறைகள் ,வாழ்வியல்  நெறிகள் சூழலியல் இயற்கையோடு இயைந்த அவர் தம் வாழ்வு என எல்லாப் பரிமாணங்களிலும் அவர்களின் பெருமைக்குரிய பண்பாட்டு அடையாளமாக ஒளிர்பவர் வேலன் என்ற முருகன் .'நீங்கள் மலைவாழ் மக்களுக்கு என்ன செய்தீர்கள் ?'என்று நாம் தமிழர் கட்சியினைப் பார்த்துக் கேள்வி எழுப்பும் அருணன் மலையும் மலை சார்ந்த இடமுமாகிய குறிஞ்சி நிலத்தின் கடவுள் என்று சங்க இலக்கியத்தில் போற்றப் படும் முருகன் தமிழர்களின் அடையாளம் என்பதை வசதியாக மறந்து விட்டுப் பேசுகிறார் .

"தெலுங்கரான பேராசிரியர் அருணன் எழுதிய தமிழ் நூல்கள் இதோ "என்று சில நூல்களின் பெயர்கள் இணையத்தில் பட்டியலிடப் பட்டிருக்கின்றன .இதன் மூலம்  என்ன செய்தி சொல்ல முன்வருகிறார்கள் ? தமிழ் மொழிக்கும் தமிழர்களுக்கும்ஆதராகவோ ஏன் எதிராகவோ கூட தமிழிலேயே ஒரு வெள்ளைக்காரன் கூட கட்டுரை எழுத முடியும் .அதனாலேயே அவர் தமிழராகி விடமுடியுமா ?  இத்தாலி நாட்டு வீரமாமுனிவர் செய்த தமிழ்த் தொண்டை விடவா ஒருவர் அதிகம் செய்து விட முடியும்  ?அவர் இருந்த போதும் இறந்த பிறகும் அழைக்கப் படுவது இத்தாலியர் என்றுதானே ?

அப்படி என்னதான் தெலுங்கர் பேராசிரியர் அருணன் தமிழில் எழுதி விட்டார்
என்று பார்த்தால் 'தமிழரின் தத்துவ மரபு ' என்ற நூல் அதுவும் இரண்டு பாகங்கள் !  ஒவ்வொரு சமூகத்திலும் வெவ்வேறு காலக்கட்டங்களில் அந்தந்த சூழலுக்கேற்ப எழுதப் படும்   இலக்கியங்களில் மாக்ஸியத்தின் பொருள் முதல்வாதத்தை முன் வைத்து அக் குறிப்பிட்ட மக்களின் தத்தவ விசாரத்தையும்  ,மரபையும்  கண்டறிய முற்படுவது பார்வையற்றவர் யானையைத் தடவி அதனை விளக்க முனைவதைக் காட்டிலும் அபத்தமானது  . அதனால் தான்   மேட்டுக் குடியினரை மட்டுமே சென்றடைந்த ஓஷோ வின் தத்துவம் தமிழரின் வாழ்வில்  ஏற்படுத்திய தாக்கம் பற்றியெல்லாம் அருணன் எழுதியுள்ளார் .

தத்துவத் துறையில் முனைவர் பட்டம் பெற்று தத்துவப் பேராசிரியராக விளங்கும் கத்தோலிக்கக்  குருவான பேராசிரியர் நிஷாந்த் இருதய தாசன் Nishant Irudayadason' ECOLOGICAL CONSCIOUSNESS IN THE MURUKAN CULT'என்ற தலைப்பில் எழுதியிருக்கும் ஆங்கிலக் கட்டுரையில் வெளிப்படுத்தியிருக்கும் ஆழமான கருத்துக்கள் இங்கு நோக்கத்தக்கது .கீழை மேலை என எல்லா  தேசங்களிலும் எந்த ஒரு மதம் அல்லது கடவுள் கொள்கைக்கு மையமாகவும் மூலமாகவும் நமது  பூமியே இருக்கிறது என்றும் மதங்களின் சடங்குகள் ,வழிபாடுகள் அனைத்தும்  பிரபஞ்சத்தைப் பேணுவதற்கான நெறிகளாகவே வகுக்கப் பட்டுள்ளன என்றும் குறிப்பிடுகிறார் .அந்த நோக்கில் தமிழ்க் கடவுளாகிய முருக வழிபாடும் காலம் தோறும் அவரைப் பற்றி பரிணாமம் பெற்ற புராணங்களும்  இயற்கையோடு இயைந்த இறைச் சிந்தனைக்கு எப்படி விளக்கமாக  இருக்கின்றன என்பதனைச் சான்றாதாரங்களுடன் தெளிவு படுத்துகிறார் .முருகனது பிறப்பிலேயே பஞ்ச பூதங்களின் பங்கு இருப்பதனை தமது ஆய்வுக் கட்டுரையில் தகுந்த விளக்கங்களுடன் நிறுவியுள்ளார் .குறிஞ்சி நிலத்தின் தலைவனாகிய முருகன் ,தமிழ் மக்களின் தெய்வம் மட்டுமல்ல .மலை சார்ந்தும் காடு ,கடல் ,வயல்கள் சார்ந்தும் குறிஞ்சி ,முல்லை மருதம் நெய்தல் என நிலங்களில் தன்னை இணைத்து ,இயைந்து வாழ்ந்த தமிழரின் பழம் சிறப்பின் அடையாளம் !பண்பாட்டின் பெருமை மிகு குறியீடு  !

பின்னாளில் வைதீக நெறியின் கலப்பால் ஸ்கந்தனாக மாறிப் போன ஆதித் தமிழரின்  வேலன் பற்றிய செய்திகள் நிஷாந்த் இருதயதாசன் அவர்கள் கட்டுரையில் இடம் பெறவில்லையே என்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்ட பொழுது அதைப் பற்றிய ஆய்வில் தாம்   ஆழமாக  ஈடுபட்டிருப்பதாகவும்  விரைவில் அதையும் ஒரு நூலாகக் கொண்டு வரவிருப்பதாகவும் தெரிவித்தார் ..பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவில் பண்பாட்டுக் கலப்பு  தவிர்க்க முடியாது என்று தெரிவித்த அவர் வைதீக நெறியில் கலந்து வேறு ஒரு பரிமாணம் அடைந்திருக்கும் ஸ்கந்தனான முருக வழிபாடு ஏற்புடையது என்றாலும் ஆதி முருகனை மீட்டெடுப்பதும் நமது கடமை எனத் தெரிவித்தார் .அவர் அடுத்துக் கூறிய செய்தி மிக முக்கியமானது .அவ்வாறு மீட்டு எடுக்கும் முயற்சியில்தான் நாம் தமிழர் கட்சி ஈடு பட்டிருப்பதாகவும் அது வரவேற்கத்தக்கது என்றும் தெரிவித்தார் .பேராசிரியர் நிஷாந்த் இருதயதாசன் {Nishant Irudayadason} பெரும்பாலும் ஆங்கிலத்திலும் பிரெஞ்சு மொழியிலும்தான் கட்டுரைகள் எழுதுகிறார் என்றாலும் தம்மை ஆங்கிலேயன் என்றோ பிரெஞ்சுக்காரன் என்றோ சொல்லிக் கொள்வதில்லை  என்பது குறிப்பிடத்தக்கது .

இனி மேல் முருகன் பிராமணியக் கடவுள் என்று எகத்தாளமாக பேராசிரியர் அருணன் பேச முற்படுவதற்கு முன்னால் சங்க இலக்கியத்தில் முருகன் குறித்து  இடம் பெறும் வேலன் வெறியாட்டு போன்ற செய்திகளையெல்லாம் படித்து விட்டு  வருவது நல்லது .நக்கீரர் பாடிய திருமுருகாற்றுப் படை என்ற நூலில் தமிழ்க் கடவுள் முருகனின் ஆறு படை வீடுகளும் அவனது பெருமைகளும் விவரித்துக் கூறப் படுகின்றன .ஆனால் பிற்காலத்தில் வடமொழியில் உள்ள சிவசங்கரசங்கிதையின் ஒரு பகுதியான ஸ்கந்தனின் வரலாற்றைக் கூறும் கந்தபுராணம்  வடமொழி வைதீக நெறி கலந்து எழுதப் பட்டுள்ளது .இதனால் முருகன் தமிழ்க் கடவுள் இல்லை என்றாகி விடுவாரா ?

இடதுசாரிக் கொள்கைப் பிடிப்பும் அதே நேரத்தில் நல்ல இலக்கியத் தேர்ச்சியும் புலமையும் ஆழமான அறிவோடு பண்பட்ட உள்ளத்துடன் பழகுகின்ற  சிற்பி பாலசுப்ரமணியம் கவிஞர்  இன்குலாப் பேராசிரியை சரசுவதி ராஜேந்திரன் போன்றவர்களுக்கு, தம்மையும் இடதுசாரி அறிவு ஜீவியாகக் காட்டிக் கொள்ளும் பேராசிரியர் அருணன் இழிவை உண்டு பண்ணுகிறார் என்றுதான் சொல்ல வேண்டும் .

பேராசிரியர் அருணனின் அடுத்த அபத்தமாக அவரது அர்த்தமற்ற பிராமணிய சாடல்  பற்றி அடுத்து பதிவு செய்கிறேன் இப்பவே கண்ணைக் கட்டுதே !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக