ஞாயிறு, 27 அக்டோபர், 2013

தமிழ் சினிமா வரலாற்றில் தொழில்நுட்பம்

ஒவ்வொரு திரைப்படத்தின் சிறப்பையும் வெற்றியையும் தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிப்பது அதில் இடம்பெற்றிருக்கும் நூதனமான அல்லது புதுமையான அம்சங்கள். கதை, திரைக்கதை அமைப்பு, காட்சிகளை வெளிப்படுத்தும் விதம் – இவை தவிர தொழில்நுட்ப அளவில் ஒளி-ஒலி நுட்பம் மற்றும் பல புதிய கண்டுபிடிப்புகளையும் உள்ளடக்கிய புதுமையே திரைப்படத்தின் வெற்றியை நிர்ணயிக்கிறது.
தமிழில் தொடக்க காலத்தில் வெளிவந்த படங்கள் புராண கதைகளை உள்ளடக்கமாகக் கொண்டிருந்ததால் அதற்கேற்ற கலை வடிவத்தில் பிரம்மாண்டங்களையும் சில இயற்கையை மீறிய (supernatural) ஜால வித்தைகளையும் காட்டுவதற்கு பல தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டன. கடவுளர்கள் மற்றும் அவதாரங்கள் பற்றிய அல்லது தெய்வ நம்பிக்கை கொண்ட பக்தர்களின் வாழ்க்கையில் ஏற்படும் விசித்திரங்கள் மேலும் தொன்மக் கதைகளின் வீர சாகசங்கள் - இவற்றை வெளிப்படுத்த பல்வேறு தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டிருந்தன. தமிழின் முதல் படமான கீசகவதத்திலிருந்து அடுத்தடுத்து வெளிவந்த படங்களில் பரீட்சார்த்த ரீதியில் பயன்படுத்தப்பட்ட அந்த உத்திகள் மக்களின் ஆர்வத்தைத் தூண்டுவதாக அமைந்திருந்தன.
ஒரே காட்சியில் ஒருவர் இருவராகத் தோன்றும் ‘துருவா ’ (1935) படத்தில் சிவ பாக்கியம் ராணியாகவும், கைரேகை பார்க்கும் குறத்தியாகவும் ஒரே காட்சியில் தோன்றியது குறிப்பிடத்தக்கது.
புராண மரபிலிருந்து ஓரளவு விடுபட்டு 1950க்குப் பிறகு வெளிவந்த படங்கள், கதை அளவில் மாறுபட்ட போது கதைக்  களனை வெளிக்கொணர்ந்த வடிவங்களும் உத்திகளும் மாறுபட்டன. ஆனாலும், நீளமான காட்சிகளில் இடம் பெற்றிருந்த நீண்ட வசனங்கள், மெலோட்ராமா (melodrama) போன்ற பாணியில் அமைக்கப்பெற்ற நடிப்பு – இவற்றில் ஒளி-ஒலி நுட்பங்களுக்கு முக்கியத்துவம் அவ்வளவாகக் கொடுக்கப்படவில்லை என்றே சொல்ல வேண்டும்.
1954ஆம் ஆண்டு வெளிவந்த ‘அந்த நாள்’ திரைப்படம், பழைய பாணியில் இருந்து மாறுபட்டு, ஜப்பானிய வகை திரைப்படம் போல பாடல் எதுவும் இடம் பெறாமல் கேமராவின் கோணத்திலேயே கதையை நகர்த்தி பெரும் புரட்சியைச்  செய்தது. இப்படத்தின் தொடக்க காட்சியே புதுமையான முறையில் அமைக்கப்பட்டிருந்தது., வீணை எஸ்.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படம் அஹிர குரோசோவாவின் ‘ரஷ் ஓமன்’ எனும் திரைப்படத்தின் திரைக்கதையை தழுவியே எடுக்கப்பட்டது. திரைக்கதையை வடிவமைத்த ஜாவர் சீதாராமன், துப்பறியும் அதிகாரியாக நடிக்க சிவாஜி கணேசனுடன் பண்டரி பாய் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சுபம் என்ற முடிவை எதிர்பார்த்து வரும் ரசிகர்களுக்கு முதல் காட்சியிலேயே சிவாஜி கணேசன் சுடப்பட்டு இறக்கும் காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்க வேண்டும். இந்தப் படம் முழுக்க பின்னோட்டம் (flashback) உத்தியிலேயே சொல்லப்பட்டிருக்கிறது. கொலைக்கான காரணத்தை ஒவ்வொரு கதாபாத்திரமும் வேறு, வேறு விதமாகச் சித்தரிக்க, அதற்கு கையாளப்பட்ட கேமரா கோணங்களே உறுதுணையாக அமைந்தது. இறப்பதற்கு முன்பு சிவாஜி கணேசன் நாற்காலியில் அமர்ந்தபடி பண்டரி பாயிடம் பேசும் காட்சியில் அவர் கண்கள் பாயும் எல்லாத்  திசைகளிலும் கேமரா பாய்வதை உணர முடிந்த தொழில்நுட்பம் பெரும் அதிசயமாகப் பேசப்பட்டது. ஒரு காட்சியில் சிவாஜி கணேசன் சாவியைத் தூக்கிப் போட்டுப் பிடிக்கும்போது கேமராவும் அந்தச்  சாவியுடன் மேலும் கீழும் செல்வதைப் பார்க்கையில் காட்சியமைப்பின் தத்ரூபம் புலப்பட்டது. இந்தப் படம் தொழில்நுட்பத்திற்கு மட்டுமல்லாது, கதையிலும், கதை நகர்த்தப்பட்ட விதத்திலும் புதுமைகளைக் கையாண்டிருந்தது. மேலும், தமிழ்த்  திரையுலகின் முதல் எதார்த்தப் படம் என்றும் இதைச் சொல்ல முடியும். தரமான, அதே நேரத்தில் வித்தியாசமான கதைக்கு உயிர் கொடுப்பதில் தேவையான தொழில்நுட்பங்கள், குறிப்பாக கேமரா கோணத்தில் கையாளப்பட்டன. அதன் பிறகு பல வருடங்கள் கழித்து கே.பாலச்சந்தரின் ‘இரு கோடுகள்’ என்ற படத்தில் ‘அந்த நாள் ’ படத்தில் கையாளப்பட்டிருந்த கேமரா கோணத்தை கலைக்டராக வரும்  சௌகார் ஜானகி மாநில முதலவரைச் சந்திப்பதாக வரும்    காட்சியில்  வெற்றிகரமாகக் கையாண்டிருந்தார் இயக்குநர். அதே 1954ஆம் ஆண்டில் வெளிவந்த ‘மலை கள்ளன்’ படத்தில் மலையிலிருந்து கயிறைப்  பிடித்துக் கொண்டு எம்.ஜி.ஆர். இறங்குவது போன்ற திகிலானக் காட்சியில் பயன்படுத்தப்பட்டிருந்த தொழில்நுட்பம் அப்படத்திற்கு தேசிய விருதைப் பெற்றுத் தந்தது.
அமெரிக்காவில், பெரிய ஸ்டுடியோ மரபிலிருந்து மாறுபட்ட திரைப்படங்களால் அமெரிக்க புதயி அலையை (American New Wave) 1960களுக்குப் பிறகு அமெரிக்க இயக்குநர்கள் உருவாக்கினார்கள். நிறைய வன்முறை காட்சிகள் இடம்பெற்ற ‘Bonnie & Clyde’ என்ற படம், நகைச்சுவை தொனியில் க்ராஃபிக்ஸ் தொழில்நுட்பத்துடன் எடுக்கப்பட்டதைத் தொடர்ந்து பல படங்கள் அதே பாணியில் உருவாக்கப்பட்டன. அதன் முழு தொழில்நுட்பத்தையும் ‘அவதார்’ திரைப்படத்தில் நாம் காண முடியும். ஆனால் இந்த வேகமான வளர்ச்சியை நம் தமிழ் திரைப்பட உலகில் வரிசையான கால கட்டங்களில் காண முடியவில்லை.
தமிழ் திரைப்படங்களைப் பொறுத்தவரை ‘அந்த நாள்’ திரைப்படத்திற்குப் பிறகு டி.ஆர்.சுந்தரத்தின் மாடர்ன் தியேட்டர்ஸ் படங்களில் கதைக்குத் தகுந்தாற் போல காட்சியமைப்புகளில் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டன.
தென்னிந்தியாவின் முதல் முழு நீள வண்ணப் படமான ‘அலி பாபாவும் நாற்பது திருடர்களும்’ (1956) படத்தில் எம்.ஜி.ஆர். நடிக்க வேண்டிய ஒரு காட்சியில் நடிக்க முடியாமல் போனதால் வேறு ஒரு நடிகரை வைத்து படமாக்கியிருந்தார் டி.ஆர்.சுந்தரம். அது எம்.ஜி.ஆர். இல்லை. டூப் போட்டு நடிக்க வைத்திருக்கிறார்கள் என்று தெரியாத அளவுக்கு தொழில்நுட்பத்தின் உதவியை கொண்டு அந்த காட்சியைப்  படமாக்கியிருந்தார்கள். அதனாலேயே அதன் பிறகு மாடர்ன் தியேட்டர்ஸ் எடுத்த எந்தப்  படத்திலும் எம்.ஜி.ஆர். நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் முறையாக வெளிநாட்டில் படமாக்கப்பட்ட ‘சிவந்த மண்’ (1969), வண்ணப் படம் என்பதோடு ஒளியமைப்பில் பெரும் வெற்றியை பெற்றிருந்தது. அதனாலேயே அது மக்களால் பெரிதும் பேசப்பட்டது. Visual Feast என்று கொண்டாடப்படும் ‘சந்திரலேகா’ (1948) என்ற படம் ஒரு பாடல் காட்சியின் பிரம்மாண்டத்திற்காகவும் தத்ரூப காட்சி அமைப்பிற்காகவும் சிறப்பான தொழில்நுட்பங்களை சிறப்பான கேமரா கோணங்களில் கையாண்டு, படமும் பெரும் வெற்றி பெற்றது. ‘பறக்கும் பாவை’ என்ற படத்தில் மிகச் சிரமமான சில காட்சிகள் நேர்த்தியான தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டதாக மறைந்த நடிகர் நம்பியார் சொல்லியிருப்பார்.
ஈஸ்ட்மென் கலர் பயன்பாட்டிற்குப் பிறகு பெரிதும் பேசப்பட்ட slow motion காட்சிகள், சிவாஜி கணேசனுக்கு மிகப் பெரும் வெற்றிப் படமாக அமைந்த ‘வசந்த மாளிகை’  திரைப்படத்தில் கையாளப்பட்டு, பாடல் காட்சியை, அக்காட்சியில் சொல்லப்பட்ட காதல் கதையை வெகு சிறப்பாக வெளிப்படுத்தியிருந்தது.
கருப்பு-வெள்ளை படங்களுக்குப் பிறகு உருவாக்கப்பட்ட வண்ணப் படங்கள் ஒவ்வொன்றிலும் புதிய, புதிய ஒளி-ஒலி நுட்பங்கள் கையாளப்பட்டன.  ‘மை டியர் குட்டிச்சாத்தான்’ என்ற 3D படம் இந்த வரிசையில் ஒரு மைல் கல் என்று சொல்ல வேண்டும். தற்கால தமிழ் சினிமா வரலாற்றில் graphics பெரிதும் பயன்படுத்தப்படுகிறது. கமலஹாசனின் ‘தசாவதாரம்’ படத்தில் ஒப்பனையிலிருந்து காட்சியமைப்பு, கதை நகர்த்தப்பட்ட விதம் எல்லாவற்றையும் இந்த தொழில்நுட்ப சாதனையைக் காண முடியும். ‘எந்திரன்’ படத்திலும் தொழில்நுட்ப வித்தைகளின் புதிய வீச்சினைக் காண முடிந்தது.
இந்தியத் திரைப்பட வரலாற்றில் முதன்முதலாக ஏரோ 3d தொழில்நுட்பம் கொண்ட படம் விஸ்வரூபம். Red Tales மற்றும் Rise of the Guardians ஆகிய இரண்டு அமெரிக்கத் திரைப்படங்களுக்குப் பிறகு உலகத் திரைப்பட வரலாற்றில் மூன்றாவதாக ஏரோ 3D தொழில்நுட்ப வடிவம் கொண்ட படம் இதுவே. விஜய் நடித்த துப்பாக்கி படத்தில் சந்தோஷ் சிவன் மிக முழுமையான மற்றும் சக்திவாய்ந்த டிஜிட்டல் படத்தை உருவாக்கும் புதிய வகை Arri Alexa டிஜிட்டல் மோஷன் கேமரா அமைப்பைப் பயன்படுத்தி படத்திற்கு உயிர் கொடுத்துள்ளார்.
ஒவ்வொரு காலக் கட்டத்திலும் வெவ்வேறு தொழில்நுட்பங்களைக் கண்டுகொண்டிருக்கும் தமிழ் சினிமாவில், அதனால் சில சாதகங்களும், சில பாதகங்களும் நேர்ந்துள்ளன. ஆரம்ப கால கருப்பு வெள்ளை படங்களிலும், அதற்குப் பிறகு வந்த வண்ணப் படங்களிலும் புராணமோ,  சமூகக் கதையோ, அல்லது நகைச்சுவை படமோ - எதுவாக இருந்தாலும், அழுத்தமான கதைப் பின்னலே  படத்தின் மையமாக இருந்தது. அந்தக் கதைகளை திரைக்கதை அமைப்பில் நேர்த்தியாக நகர்த்திச் செல்வதற்கு ஏற்ற வகையிலும் நுகர்வோரின் அழகியல் உணர்வுக்கு ஈடுகொடுக்கும் விதத்திலும் மட்டுமே தேவையான அளவுக்கு ஏற்ற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டன. அதனால்தான் ‘தெய்வ மகன்’ (1969) என்ற சிவாஜி கணேசனின் படம் எகிப்தில் திரையிடப்பட்டபோது ஒரே காட்சியில் மூன்று நபர்களாக வரும் சிவாஜி கணேசன் ஒரே ஆள் என்பதை அங்கு நம்ப மறுத்தார்கள். அது ஒப்பனை மற்றும் அவரது நடிப்பிற்குக் கிடைத்த வெற்றி மட்டுமல்லாமல், கேமரா மற்றும் எடிட்டிங் உத்திகளுக்குக் கிடைத்த வெற்றி என்றே சொல்ல வேண்டும். அதனால்தான் அவர் அமெரிக்காவிலும் அன்றைய ஜனாதிபதியால் ஒரு நாள் கவர்னராக நியமிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.
வரலாற்றுத் தொடர்பான கதைகளைப் படமாக்கும் பொழுது அதற்கேற்றாற்  போல பிரம்மாண்டமான அரங்கங்களும், ஒப்பனைகளும், காட்சி அமைப்புகளும் தொழில்நுட்பங்களின் வாயிலாக செய்யப்பட்டாலும், சிறு குறை நேர்ந்தாலும் பெரிய அளவில் விமர்சிக்கப்பட்டது. உதாரணமாக, ‘ராஜ ராஜ சோழன் ’ (1973) மிக நன்றாக எடுக்கப்பட்டிருந்த போதும் போர்ச்சுகீசியர்கள் காலத்தில்  தமிழ் நாட்டிற்கு அறிமுகமான ரோஜாப் பூ பதினோறாம் நூற்றாண்டுக்கு முற்பட்ட சரித்திரக் கதையில் எவ்வாறு கால வழுவாக இடம்பெற முடியும் என்ற கேள்வி பெரிதாக எழுப்பப்பட்டது. ஆனால், சமீபத்தில் வெளிவந்த தசாவதாரம் படத்தில், சைவ வைணவ மதம் தொடர்பான சர்ச்சையில் கதையும் வரலாறும் திரிக்கப்பட்டு கிராஃபிக்ஸ் கலையில் முழுவதுமாக உண்மை மறைக்கப்பட்டுவிட்டது. தொழில்நுட்பத்தினால் ஏற்படும் பாதகங்களில் ஒரு உதாரணமாக இதனைக் கொள்ள முடியும். கதைக்கேற்ற தொழில்நுட்பங்கள் என்பது போய், கதை இல்லாத வறட்டுப்  படங்களுக்கு வலு சேர்ப்பதற்காகவே தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படும் ஆபத்தும் இப்பொழுது ஏற்பட்டுள்ளது.  
தமிழ் திரைப்பட இசையிலும் கூட தொழில்நுட்பத்தின் தாக்கம் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்றே சொல்ல முடியும். சூடான் நாட்டின் இசையில் நமது சுத்த தன்யாசி மற்றும் சுத்த சாவேரி ராகங்களின் சாயலை நாம் பார்க்க முடியும். ஆனால், பண்பாட்டை புலப்படுத்தும் நம் இசை வேர்களை விட்டுவிட்டு, புரியாத சொற்களும் புலப்படாத பொருளுமாக இசை தொழில்நுட்பத்தில் மண்ணோடு அந்நியப்பட்டு தமிழ் சினிமாவில் பயன்படுத்தப்படுகிறது.

1950களில் வெளிவந்த ‘Film Noir’ பாணியில் எடுக்கபட்ட படங்கள், பிறகு, ‘Neo Noir’ படங்களாக அடுத்த கட்டத்திற்கு சென்ற பிறகும், கதையோடு இயைந்து கதாபாத்திரங்களின் நடிப்பிற்கு மெருகேற்றுவதாகவும், கதையை நகர்த்திச் செல்வதாகவும் மட்டுமே தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டன. இன்று, வெறுமையான கதைக் களத்தில் நாயகனாக நிற்பதே தொழில்நுட்பம் என்னும் நிலை மாறி அந்த காலத்து ‘அந்த நாள்’ போன்ற வலுவானத் திரைப்படங்களை நினைவு கூறும் வகையில் எடுக்கப்பட்டால் தொழில்நுட்பம் திரைப்படத்தில் சாதகமான அம்சமாக அமைய முடியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக