செவ்வாய், 13 நவம்பர், 2012

தந்தி தொலைக் காட்சியில் நெகிழ்ச்சியான தீபாவளி நிகழ்ச்சி !

தந்தி தொலைக் காட்சியில் நெகிழ்ச்சியான 

தீபாவளி நிகழ்ச்சி !

உள்ளத்தை கொள்ளை கொண்ட 360 உலகைச் சுற்றி !

                ஒளியின் திருநாள் என்று கொண்டாடப் படும் தீபாவளியில் மத்தாப்புக்களும் வாண  வேடிக்கைகளும் நான் சிரித்தால் தீபாவளி என்று வர்ண ஜாலம் காட்ட சுவாசத்தை இழுத்துப் பிடிக்கும் புகை மண்டலத்துக்குப் பயந்து தொலைக் காட்சியில் கண் பதித்துக் கிடந்த போது  சிந்தனைக்கு விருந்து வைத்தது புதிதாகத் தொடங்கப் பட்டிருக்கும் தந்தி தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்று .மாலை ஐந்தரை மணி முதல் 6 மணி வரை ஒளி பரப்பு செய்யப் பட்ட  360 உலகைச் சுற்றி என்ற நிகழ்ச்சி இன்றைய தீபாவளியின் விஷேசம் என்று சொல்லலாம் .பல்வேறு தொலைக் காட்சிகளிலும்  ஓடாத அல்லது தியேட்டரை விட்டு ஓடிய திரைப்படங்கள் , நடிக நடிகையர் பேட்டிகள் என்று ஒரே மாதிரியான நிகழ்ச்சிகளுக்கு நடுவே  புருவத்தை உயர்த்திப் பார்க்க வைத்த இந்த நிகழ்ச்சி புதிய தகவல்கள் வியக்கச் செய்த சுவாரஸ்யங்கள் கலந்த கதம்பமாக நெஞ்சில் கலந்தது .

 
             உலகத்தின் பல்வேறு பகுதியிலும் கொண்டாடப் படும் வெவ்வேறு ஒளியின் திருநாள்கள் (festivals  of lights )தகவல்களை ^வரலாற்றுப் பின்னணியுடன் பாரம்பரியக் கதைகளும் சேர்த்து வழங்கினார்கள் . அறிவும் செல்வமும் பெருக , வாழ்வில் மகிழ்ச்சியும் அமைதியும் மலர ,உற்சாகமாகஉலகெங்கும் சிறப்பிக்கப் படும் விதவிதமான ஒளியின்  திருநாள்கள் பற்றி விவரித்த போது  காட்சியும் கருத்தும் கண்களையும் சிந்தையினையும் சேர்த்துக் கவர்ந்தன ! மகுடத்தோடு மன்னனின் தலையினையும் உருட்டி விட நடந்த அரசியல் சதி முறியடிக்கப் பட்ட  நான்கு நூற்றாண்டுகளுக்கு முந்தைய சரித்திரத்தை ஒளியின் நாளாகக் கொண்டாடும் இங்கிலாந்தின் பழமை போற்றும் பாரம்பரியம் இன்றைக்கு கொண்டாடப் படும் கோலாகலம் கண் முன் கொண்டு வரப்பட்டது .ஆவிகளை விரட்டுவதற்காக பேய் நெருப்பினைப் பற்ற வைத்து ஜப்பானில் நடத்தப் படும் தீப்பந்தத் திருவிழாவின் மரபினையும் ரொம்ப சுவாரசியமாகக் காட்சிகளோடு விவரித்தார்கள் .பேய் ,ஆவி என்ற நம்முடைய நாட்டுப்புற நம்பிக்கைகள் பற்றி ஆராய்ச்சி செய்பவர்களுக்கு இந்தத் தகவல் உதவியாக இருக்கலாம் .

  ஈரானில் பேசப்படும் எலாமைட்டு என்ற மொழிக்கும் தமிழ் மொழிக்கும் நிறைய ஒற்றுமை இருப்பதாகவும் இந்தியாவின் வட   பகுதியிலிருந்து ஈரானுக்கு இடம் பெயர்ந்து சென்ற தொல் திராவிடர்களின் கலப்பே இதற்குக் காரணம் என்றும் மொழியியல் வல்லுனர்கள் கருதுகிறார்கள் .ஈரானில்   பழங்குடி சமூகத்தினரின் மார்ச் மாதத்தில் தொடங்கும் புது வருட விழா கொண்டாட்டத்தில் போகிப் பண்டிகை போல நெருப்பைக் கொளுத்தி இருளையும் குளிரையும்  விரட்டி அடிக்கும் ஒளிக்கு மரியாதை செலுத்துவதாக 360 உலகைச்சுற்றி நிகழ்ச்சியில் வண்ணப் படக் காட்சிகளுடன்  விளக்கினார்கள் கலாச்சாரப் பரிமாற்றங்களும் பண்பாட்டுப் பரி வர்த்தனைகளும் மொழிக் கலப்புடன் நடந்துள்ளன என்பது நமக்குப் புரிந்தது.

        நம்முடைய அறுவடைத் திருநாளான பொங்கல் பெருநாளில் சூரியனுக்கு நன்றி செலுத்துவது நமது மரபு. ஜப்பானில்  கொண்டாடப்படும் கோஷோ ஹட்சு என்ற அறுவடைத் திருநாளும் தமிழர் மரபினை ஒட்டியே சிறப்பிக்கப் படுகின்ற பண்டிகை .இது நம்மில் பலருக்கும் தெரிந்திருக்கும் . ஆனால் நம்முடைய மாட்டுப் பொங்கல் போல தாம் வளர்க்கும் மாடுகளுக்கான திருநாளாக தென்கொரியத் தீவு ஒன்றில் பழைய புல்லை எரித்து மாடுகளுக்கு புதிய புல்  வேண்டி நடைபெறும் ஒளித்திருநாள் பற்றிய செய்தியினை தந்தி தொலைக் காட்சியின் 360 உலகைச்சுற்றி நிகழ்ச்சி மூலம் அறிந்து  கொள்ள முடிந்தது .


 இன்னொரு முக்கியமான தகவல் Hanukkah என்ற யூதர்களின் ஒளித்திருநாள் பற்றியதுதான் .ஏறக்குறைய 1800 ஆண்டுகளுக்கு முன்பு  கட்டப் பட்ட எருசலேம் தேவாலயத்தினை ஆக்கிரமித்திருந்த கிரேக்கர்களைத் தோற்கடித்து துரத்திய பிறகு அத்  தேவாலயத்தை கடவுளுக்கு மீண்டும் அர்ப்பணம் செய்திட்ட யூதர்கள் எட்டு நாள்கள் எண்ணெய் விளக்குகள்  ஏற்றிக் கொண்டாடும்  சரித்திரத்தினை அதன் பாரம்பரியத்துடன் அதோடு சேர்ந்து வழங்கும் வாய் மொழிக் கதைகளுடன் இணைத்து சொன்னது சுவையாக இருந்தது . ஒரே ஒரு நாளுக்கான எண்ணெய்  மட்டுமே இருக்க  எட்டு நாள்கள் விளக்கு அணையாமல் சுடர் விட்டு எறிந்ததாகச்  சொல்லப் படும் அந்த இரண்டாம் நூற்றாண்டுக் கதை  இருக்கின்ற இயற்கை வளங்களை மற்றவர்களிடமிருந்து சுரண்டாமல் பங்கிட்டு பகிர்ந்து வாழலாம் என்ற  பாடத்தை அல்லவா நமக்குத் தருகிறது !

இறுதியில் நமது தீபாவளி செய்திகளைக் கண் கவர் விதத்தில் வழங்கினார்கள் பொன்னும் பொருளும் அருளும் திருமகள் இல்லங்களில் எழுந்தருள்வதற்காக ஏற்றப்படும் மண் விளக்குகள் பற்றிக் கூறினார்கள் ஆனால் சந்தையில் மண் விளக்குகள் விற்பனை சரிந்து சீன விளக்குகள் மவுசு பெற்றிருப்பதாக வரும் செய்திகள் கவலை அளிக்கின்றன திருமகள் வீற்றிருக்கும் செந்தாமரை மலர்களையும் காணவில்லை அவை மலர்ந்திருக்கும் நீர் நிலைகளையும் காணவில்லை . இப்படி இயற்கையினை மொட்டை அடித்தது போலவே நம் முன்னோர்கள் இயற்கையிலிருந்து உருவாக்கிய  பொருள்களையும் பரணில் போட்டு விட்டோம் அத்துடன் நமது பாரம்பரியத்தையும் சேர்த்தே  தலை முழுகி முகவரி இழந்து நிற்கிறோம் .அதன் ஒரு அடையாளம்தான் மண் விளக்குகளின் இடத்தை சீன விளக்குகள் பிடித்துக் கொண்டதும் ! waste  management  என்ற பெரிய பெரிய வார்த்தைகளை இன்று பயன் படுத்திக் கொண்டிருக்கிறோம் ஆனால் நம்முடைய பாட்டிமார்கள் தயாரித்த விளக்குமார்களில்  கூட அந்த waste  management  னைக் காண முடிந்தது . பனை ஓலையிலிருந்து அற்புதமாக உருவாக்கப் பட்ட வண்ணச் சீர்ப் பெட்டிகளும் தென்னை  ஓலையிலிருந்து  உருவாக்கிய  விளக்குமார்களும் பிளாஸ்டிக் வரவால் காணாமல் போய்க் கொண்டிருக்கின்றன .
 
       உலகெங்கும் கொண்டாடப்படும் ஒளியின் திருநாள் பற்றி தந்தி தொலைக் காட்சியின் 360 உலகைச் சுற்றி நிகழ்ச்சி அவ்  விழாக்கள் பொதுவாக சூரியனுக்கு மக்கள் நன்றி சொல்கின்ற நாள் என்பதனைத் தெளிவாகச் சொன்னது . அந்த ஆதவன் மார்பிலேயே பெரிய ஓட்டை போட்டு விட்டு  ஒளியின் நாளைக் கொண்டாடும் நாம் நம் பழம்  கலாச்சாரம் பாரம்பரியம் இயற்கையுடன் ஒட்டிய வாழ்வு இவற்றை உலக நாடுகள் பலவற்றின் பாரம்பரியங்களோடு நினைவு கூறும்  வகையில் ஒளிபரப்பான 360 உலகைச் சுற்றி நிகழ்ச்சியில்  சொலப்பட்டவற்றைத் தாண்டி நம்மை சிந்திக்க வைத்தது சிறப்பு அம்சமாகும் . ஆங்கிலச் சொற்கள் தேவைக்கு ஏற்ப பயன் படுத்தப் பட்டிருந்ததாலும் பன்னாட்டு சம்பவங்களின் தொகுப்பில் தவிர்க்க முடியாது என்பதாலும்  சுருங்கச் சொல்லி விளங்க வைத்த மொழி நடையும் காட்சித் தொகுப்பும்  பாராட்டுக்குரியவை .Media  என்பது அறிவுறுத்துவது தகவல் தருவது பொழுது போக்கிற்குரியது என்பதைக் கடந்து நின்ற  தந்தி தொலைக் காட்சியின் 360 உலகைச் சுற்றி தீபாவளி நிகழ்ச்சி அற்புதம் 



சனி, 25 பிப்ரவரி, 2012

தமிழ் சினிமாவில் தலித் கதைகள்?

தமிழ் சினிமா தொழில் நுட்பங்களில் வளர்ச்சி அடையாத தொடக்க காலங்களிலேயே நந்தனார் சரித்திரம் நான்கு முறை படமாக்கப்பட்டுள்ளது.  தலித் மக்களைப் பற்றிய கதைகள் அந்தக் காலத்திலயே வெள்ளித் திரையில் இடம் பிடித்திருந்தது.  ஆனால் தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியைக் கண்டுவிட்ட இன்றைய தமிழ் சினிமா தலித்துகளின் வாழ்க்கையை படமாக்குவதில் தயக்கம் காட்டுவது ஏன் அல்லது பாரா முகமாய் புறக்கணித்துச் செல்வது ஏன்? லயோலா கல்லூரியின் ஊடகக் கலைகள் துறை 25.02.2012 அன்று 21ஆம் நூற்றாண்டில் தமிழ் சினிமா என்ற தலைப்பில் நடத்திய மாநில கருத்தரங்கில் கட்டுரையாளர் முனைவர் திருவாசகம் மேற்கண்ட கேள்வியை எழுப்பியபோழுது மாணவர்கள் தலையாட்டி ஆமோதித்தனர்.  இந்தக் கருத்தரங்கில் தொடக்க உரை ஆற்றிய இயக்குனர் பாலு மகேந்திரா அவர்கள் நல்ல சினிமா என்பது எது என்ற வினாவை எழுப்பி விளக்கமும் அளித்தார்.  உங்களுக்குப் பயனுள்ள வகையில் எடுக்கப் பட்டுள்ளதா அது நல்ல சினிமா, உங்கள் வளர்ச்சிக்கு உதவுகிறதா அதுவும் நல்ல சினிமா, உங்கள் வாழ்க்கையை முன் வைக்கிறதா அது நல்ல சினிமா என்ற அவரது உள்ளார்ந்த பதிலில் திருவாசகத்தின் கேள்விக்கான பதிலைத் தேடினால் கிடைப்பதென்னவோ ஏமாற்றம் தான்.

கறுப்பின மக்கள் பற்றிய எழுத்துக்களும் கதைகளும் தீவிரம் அடைந்து வருவது போலவே தமிழில் தலித் மக்களைப் பற்றிய கதைகளும் கவிதைகளும் அவர்கள் வாழ்வையும் வாழ்வுக்கான போராட்டத்தையும் முன் வைத்து எழுதப்பட்டுவரினும் தமிழ்த் திரைப்பட இயக்குனர்கள் இவ்விஷயங்களைப் படமாக்க முன் வராமல் போனது ஏன் என்ற கேள்வி நியாயமானதுதான்.  முனைவர் திருவாசகம் தமது கட்டுரையில் அந்தக் காலத்திலாவது மதுரைவீரன் படத்தில் கூட அருந்ததிய இனத்தை சேர்ந்தவர்கள் எம்.ஜி.ஆரின் பெற்றோராகக் காண்பிக்கப்பட்டார்கள், இப்பொழுது அந்த அளவு கூட தலித் மக்களின் பிரதிநிதித்துதுவம் திரைப்படங்களில் இல்லை என்று ஆதங்கப்பட்டுக்கொண்டார்.  நான் இங்கு ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.  மறைந்த முன்னாள் முதல்வர் மக்கள் திலகம் திரு எம். ஜி. ராமச்சந்திரன் அவர்களைத் தெய்வமாகவே உயர்த்திப் பார்க்க வைத்த மதுரை வீரன் திரைப்படம் அவரை ஒரு அருந்ததியர் இனத்து குடும்பத்தின் பிள்ளையாகக் காட்ட விரும்பவில்லை என்பது அவலமான உண்மை.  வழக்கில் இருக்கும் கதைப்படி மதுரை வீரன் தாழ்த்தப்பட்ட சமூகத்துப் பெற்றோருக்கு மகனாகப் பிறந்தவன் தான்.  ஆனால் எம்.ஜி.ஆரை ஒரு தாழ்த்தப்பட்ட இனத்தில் தாழ்த்தப்பட்ட பெற்றோருக்குப் பிறந்த மகனாக சித்தரிக்க வேண்டுமா என்று இரவு பகலாக தூங்காமல் சிந்தித்திருப்பார்கள் போலும்!  அது எம்.ஜி.ஆரின் புகழுக்கும் உயர்ந்த தெய்வீக மனிதர் என்ற பிம்பத்திற்கும் களங்கம் கற்பிக்கும் என்று நம்பினார்களோ என்னவோ.  மதுரை வீரன் ஜனன கதையே மாற்றப்பட்டு உண்மையில் அவர் உயர்ந்த குடும்பத்தில் பிறந்தவர் என்றும் அருந்ததியர் குடும்பத்தால் கண்டெடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டவர் என்றும் எனவே மதுரை வீரன் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவன் இல்லை என்றும் கதையையே தலைகீழாக மாற்றி விட்டார்கள்.  சமீப காலங்களில் தலித்துகள் பற்றி படங்களில் இடம் பெறுவதில்லை என்று யார் சொன்னது? புத்தியற்ற காமெடியன்களாகவும் கோமணம் மட்டுமே கட்டித் திரியும் கூலிக் காரர்களாகவும் கதாநாயகர்களுக்கு கால் பிடித்துவிடும் விசுவாச வேலைக்காரர்களாகவும் இவர்கள் தானே சித்தரிக்கப்படுகிறார்கள்.  சின்னக் கவுண்டர் என்ற படத்தில் 'வண்ணான் பயலுக்கு இவ்வளவு அறிவா அப்படின்னு பொறாம படராங்கடா' என்று கவுண்டமணி செந்திலிடம் கூறும் காட்சியில் ஆழமாகத் தெரிகிறதென்ன?  இம்மக்கள் அறிவிலிகள் என்பதுதான் சமூகத்தின் பரவலான மதிப்பீடு என்பதுதானே.  

வெள்ளித்திரையில் வெள்ளிவிழா கண்ட நாட்டாமை படத்தில் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்ட தலித் பெண்ணுக்கு நியாயம் வழங்குகின்ற நாட்டாமை 'அவங்களுக்கு படுக்குறதுக்கு நாம பாய் குடுக்கலாம்.  அதுல நாமளே போய் படுத்துக்கலாம்ங்கறது என்னடா நியாயம் என்று உச்ச ஸ்தாயியில் கர்ஜிப்பார்.  அந்த கர்ச்சனைக்குள் தாழ்த்தப்பட்ட மக்களெல்லாம் தூங்குவதற்கு பாய் கூட இவர்களிடம் தான் கையேந்திப் பெறவேண்டும் என்ற செய்திதானே ஒளிந்திருக்கிறது.

முனைவர் திருவாசகம் சகலகலா வல்லவன் கமலஹாசன் கூட தலித் மக்களை தசாவதாரத்தில் அவலட்சணமாகத்தானே காட்டினார் என குறைபட்டுக்கொண்டார்.  சந்தர்ப்பம் கிடைக்கும்போழுதேல்லாம் வைணவத்தையும் பிராமணத்தையும் தூக்கிப் பிடிக்கும் கமலஹாசன் போன்றவர்கள் தேவரின் மகனாக மட்டும் தான் நடிக்கவேண்டுமா, அருந்ததியர் மகனாக நடிக்கக் கூடாதா என்று நாம் எப்படி எதிர்பார்க்கமுடியும்?  பெரும் அறிவு ஜீவி என்ற போர்வைக்குள் 'தென்னாடுடைய சிவனே போற்றி' என்ற தேவாரத்தின் அடி நாதத்தையே மாற்றிப் போடுவதுபோல தமிழ் மண்ணுக்கு உரியது சைவம் அல்ல வைணவம் தான் என்று வரலாற்றையே தசாவதாரத்தில் திரித்து கிராபிக்ஸ் கலை நுட்பத்தில் அதை மறைத்து இளைய தலைமுறையினருக்கு தவறான சரித்திரத்தைக் கூறிய கமலஹாசனிடம் தலித் மக்களைப் பற்றி படம் எடுக்க வேண்டும் என்ற அக்கறையை எதிர்பார்ப்பது எந்தவிதத்தில் நியாயம்?

விவாத நேரத்தின் பொழுது பாலு மகேந்திரா போன்றவர்கள் கூட இது பற்றி சிந்திக்கவில்லை என்று திருவாசகம் அங்கிருந்த பாலு மகேந்திரா முன்னிலையிலேயே குறிப்பிட்ட பொழுது அவர் படங்கள் எடுத்த காலங்களிலும் தொலைக்காட்சியில் குறும்படங்கள் கொண்டுவந்த வேளையிலும் தலித் கதைகள் எழுதப்பட்டிருக்கவில்லை என்று குறுக்கீட்டாளர்கள் பாலு மகேந்திராவிற்காக பரிந்து பேசினார்கள்.  அந்த தகவல் தவறானது என்பதோடு அப்படியே தலித் கதைகள் எழுதப்பட்டிருக்காவிட்டாலும் சுற்றிலும் சேரியிலும் வயக்காட்டிலும் இருத்தலுக்காகப் போராடும் தலித் மக்களின் வாழ்வும் சூழலும் இச்சிறந்த இயக்குனரின் கலைக் கண்களுக்குத்  தெரியாமல் போய் விட்டதா என்று கேட்காமல் இருக்க முடியவில்லை.  தலித் பெண்ணின் உடல் 'பொதுவானது', 'கீழானது'.  அதன்மேல் யார் வேண்டுமென்றாலும் ஆதிக்கம் செலுத்தலாம் என்ற கேவலமான சிந்தனையை எத்தனை தமிழ்ப் படங்கள் போதித்திருக்கின்றன!

இந்த விவாதங்கள் மிக நீண்ட ஆழமான ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டியவை.  கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரைகளில் லயோலா கல்லூரியின் காட்சி தகவலியல் துறை பேராசிரியர் சின்னப்பன் அவர்களின் அந்நியன் படம் பற்றிய அலசல் இயக்குனர் ஷங்கரின் எல்லாப் படங்களுமே மறு ஆய்வுக்கு உட்படுத்தப்படவேண்டியவை என்ற எண்ணத்தை வலுவாக சொன்னது.  சினிமா என்ற அற்புதமான கலை ஒரு பொழுதுபோக்கு தான்; ஆனால் அதன் வீச்சு சமூகத்தின் எல்லாப் பக்கங்களையும் எளிதாகச் சென்று தாக்கக் கூடியது.  எனவே இது போன்ற விழிப்புணர்வைத் தூண்டும் கருத்தரங்குகள் வரவேற்கப்படவேண்டியவை.  அக்கருத்தரங்கில் இடம் பெற்ற அனைத்துக் கட்டுரைகளையும் வாசிக்க விரும்புவோர் லயோலா கல்லூரியின் ஊடகக் கலைகள் துறையை தொடர்பு கொள்ளலாம்.