திங்கள், 15 ஆகஸ்ட், 2011

நண்பனுக்கு...

நான்
பட்டம் விடவும்
பயன்படாத
குப்பைக் காகிதம்
என்றுதான்
எண்ணியிருந்தேன்.
அக்கறை மை தோய்த்து 
என் கண்களில் 
உன் அன்பை
நீ எழுதிய பொழுதுதான்
சிறகின்றி கூட நானும்
வானம் தொட முடியும்
என்றுணர்ந்தேன்


பாலை வெளியில்
தகிக்கும் மணலில்
நழுவிய என் கால்கள்
உன் சிநேகக்
கரங்களில்தான்
வலுப் பெற்றன.


உன் நினைவுகள்
தனிமையிலும்
தலை கோதிவிட்ட பொழுதுதான்
நட்சத்திரக் கூட்டங்களில்
நானும் ஒருத்தியாய்
ஒளிர்ந்திருக்கக் கண்டேன்


பாச இழை பின்னிய
உன் மடியில்
மனம் களைப்பாறிய 
வேளையில்தான்
சதா குழம்பிய
என் சிந்தனையில்
தெளிவு கண்டேன்


கள்ளிச்செடி என்று
கவிழ்ந்து போயிருந்தேன்
புதை மணலுக்குள்
கற்பகத் தருவாய்
கம்பீரமாய் நிற்கச் செய்தது
உன் சிநேகம்.


உன் தோழமைக் காற்றை
சுவாசிக்கையில்தான்
பழைய ரணங்களின்
சுவடுகள் கூட
சொல்லாமல் கரையேற
என்
ஆழ்மனசு கூட
ஆசுவாசம் பெற்றது.




எரிகற்கள்
எதுவும் இல்லாமல்
விரல்களைத் தீண்டும்
மீன்களை
விண்மீன் கூட்டத்தைப்
பார்க்கின்ற பரவசத்துடன்
குளத்தங்கரையின்
கடைசிப் படிக்கட்டில்
மடி நிறைய புளியம் பழத்துடன்
ஒய்யாரமாய் வேடிக்கை பார்த்திருக்கும்
சிறுமியாய் மாறிய
நான்
குழந்தையாய் மலர்ந்த
அந்த வேளையில்தான்
நீ
வெடிவைத்தாய்
எல்லாம்
ஆற்று மணலில்
வீடுகட்டி விளையாடிய
குழந்தைகளின்
கூட்டாளித்தனமாய்
நினைத்துக் கொள் என்று!
எப்படி நண்பா?
இடையறாத
என் கண்ணீர் நெடி 
எட்டவில்லையா உன்னை...






எழுதியவர்: ஜெயஷாந்தி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக